இந்தியாவின் தலைமை ஆளுநராக வில்லியம் பெண்டிங் கி.பி.1828 ல்  பொறுப்பேற்றார்.

இவர்  இந்தியர்கள் மீது அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை புகுத்தினார்.

நிதித்துறை சீர்திருத்தங்கள்:

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி நிலைமையை மேம்படுத்த குடிமை ஊழியர்களின் ஊதியத்தை குறைத்தார்.

குறைந்த ஊதியத்தில் இந்தியர்களைப் பதவியில் அமர்த்தினார்.

அபினி வியாபாரத்தை முறைபடுத்தி கம்பெனியின் வருவாயை பெருக்கினார்.

இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைத்தார்.

நீதித்துறை சீர்திருத்தங்கள்:

மாநில மேல்முறையீட்டு நீதிமன்றங்களை கலைத்தார்.

சிவில் வழக்குகளுக்காக சாதர் திவானி அதாலத் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்காக சாதர் நிஜாமத் அதாலத் என்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அலகாபாத்தில் நிறுவினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள்:

மாவட்ட ஆட்சியர், நீதிபதி பதவிகளை ஒருங்கிணைத்தார்.

இராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு பல சீர்திருத்தங்களை புகுத்தினார்.

இந்திய நீதிமன்றங்களில் பயன்படுத்திவந்த பாரசீக மொழிக்கு பதிலாக வட்டார மொழிகளைப் புகுத்தினார்.

தலைமை ஆளுநரின் நிர்வாக குழுவில் புதியதாகச் சட்ட வல்லுநர் ஒருவரை நியமனம் செய்தார். அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் மெக்காலே பிரபு ஆவார்.

சமூக சீர்திருத்தங்கள்:

வில்லியம் பெண்டிங் பிரபுவிற்கு பெரும் புகழை தேடித்தந்தது அவருடைய சமூக சீர்திருத்தங்கள் ஆகும்.

கி.பி.1829 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதியான இராஜாராம் மோகன்ராயின் உதவியோடு ‘சதி’  என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்து சதி ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தார்.

கத்தியவார் மற்றும் இராஜஸ்தானில் காணப்பட்ட பெண் சிசுக்கொலை வழக்கத்தை ஒழித்ததோடு  மட்டுமின்றி  அதனை மாபெரும் குற்றமாக அறிவித்தார்.

ஒடிசாவில் வாழ்ந்த மலைவாழ் மக்களிடையே காணப்பட்ட கொடிய வழக்கமான நரபலியிடுதலை தடை செய்தார்.

தக்கர்களை அடக்குதல்:

மத்திய இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு கொள்ளைக் கூட்டத்தினர் தக்கர்கள் ஆவார்கள். மேஜர் ஸ்லீமென் தலைமையில் தனியாக ஒரு துறை தோற்றுவித்து இவர்களின் நடவடிக்கைகளை வில்லியம் பெண்டிங் முற்றிலுமாக ஒழித்தார்.

கல்வி சீர்திருத்தம்:

ஆங்கில மொழி பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டது. கல்கத்தாவில் மருத்துவ கல்லூரியும் பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியும்  நிறுவப்பட்டது.

1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்;

இதன்படி, கம்பெனியின் தனி உரிமை  ஒழிக்கப்பட்டது. வங்காள தலைமை ஆளுநர் இதியாவின் தலைமை ஆளுநராகப்  பொறுப்பேற்றார்.

தலைமை ஆளுநர் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர் ஒருவர் இடம்பெற்றார்.

சென்னை, பம்பாய், கல்கத்தாவில் கிறித்துவர்களின் நலனுக்காகப் பிஷப்புகள் நியமனம் செய்யப்பட்டனர்.

வில்லியம் பெண்டிங் பிரபு நிதி, நீதி, கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களை கொண்டுவந்து இந்தியர்களின் நலன் மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

எனவே இந்தியத் தலைமை ஆளுநர்களில் தலைசிறந்தவராகக் வில்லியம் பெண்டிங் கருதப்படுகிறார்.

 
Top